ஹட்டன் – நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை நாளை (07) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் செயற்படும் பொகவந்தலாவை ஆரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கும், அவரது குழந்தைகள் இருவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
குறித்த ஆசிரியை இறுதியாக கடந்த 2ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
கொவிட் தொற்றுக்குள்ளான ஆசிரியை, பாடசாலை நிர்வாகத்துடனும், மாணவர்களுடனும் நெருங்கி பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த ஆசிரியை நெருங்கிய பழகிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்துடன், பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தை கிருமி ஒழிப்புக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
COMMENTS