- ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா, ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதா என்று நாம் சிந்திக்க வேண்டும். பழைய விடயங்களை மறந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான இடமாக இந்த நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச்சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று (திருத்தச்) சட்டமூலங்களை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதையே அரசியலமைப்பும் நமது தேசிய கீதமும் வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையிலேயே பேச்சு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இறந்த காலத்தை திரும்பிப் பார்த்தால் அனைவரும் தவறு செய்த இடங்கள் பல இருக்கவே செய்கின்றன.
1958,1978 கலவரங்கள், யாழ்நூலக எரிப்பு, 1983 கலவரம், கெப்பத்திகொல்லாவா தாக்குதல், காத்தான்குடி தாக்குதல். அண்மையில் இடம்பெற்ற ஸஹ்ரானின் தாக்குதல் எல்லாம் கரும் புள்ளியாக அமைந்தன. சமூகத்தை ஓரம்கட்டி இதற்கு தீர்வு காண்பது என்பது தவறான வழியைத் தான்காட்டும். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான தலமாக இந்த நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் இடமாக இதனைப் பயன்படுத்தப்பட்டால் எதிர்காலம் சுமுகமாக அமையாது.
சில ஊடகங்கள் இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த முயல்கின்றன. இரண்டாவது உலக யுத்தத்தில் ஹிட்லர் நடந்து கொண்ட விதமும் இன்று சில ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதமும் வேறுபட்டவை அல்ல .
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ள அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோன்று இந்தத் தாக்குதல் உடன் தொடர்பு இல்லாத எவருக்கும் தண்டனை வழங்கப்பட கூடாது என்பதிலும் நாங்கள் அவதானமாக இருக்கவேண்டும்
மேலும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கும் திருமண வயதை 18 ஆக மட்டுப்படுத்தவும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக சிறந்த நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சமூகத்தவர்களும் தவறு செய்துள்ளனர். கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்று ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்றார்.
COMMENTS