கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வதா அல்லதுஇ அடக்கம் செய்வதா என்பதை அடிப்படையாக வைத்து, சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படும் வகையில், பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பெண்கள், சிறுவர் மேம்பாட்டு முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி பாடசாலை உட்கட்டமைப்பு, கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, இதன்காரணமாக முஸ்லிம்களும் சிங்களவர்களும் வெவ்வேறான ஆர்ப்பாட்டங்களை நாடுபூராகவும் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பேருவளையில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இந்த விடயத்தில்இ சுகாதாரப் பிரிவினர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு, நாட்டு மக்கள் என்ற ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேவேளை, அந்தச் செயற்பாடுகளை வீணடித்து, அதில் அரசியல் இலாபம் தேடுவது எதிர்க்கட்சியினருக்கு அழகில்லை என்றார்.
இந்தக் காரணத்துடன் இணைத்து, மக்களைக் குழப்புவதற்காக மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகள் மீது மீண்டும் கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறான செயற்பாடுகளைப் பிரிவினைவாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், இந்தச் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதியும் அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மீண்டும் எமது நாட்டில் ஏற்பட இடமளிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்த அவர், மக்களால் தூக்கியெறியப்பட்ட எதிர்க்கட்சியினர், தீவிரவாதிகளின் தோள்களைப் பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரக் குதிப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததால், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்களும் பயம், சந்தேகமின்றிப் பாதுகாப்புடன் இன்று வாழ்வதுடன், சகலரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழலைக் கட்டியெழுப்ப, ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்னெடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்து வரும் நிலையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இனவாதம், மதவாதம் பேசி, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
COMMENTS